Tuesday, November 8, 2011

அணு உலைக்கு கலாம் ஆதரவு : காலம் செய்த கோலம்


கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும். இயங்கவும் ஆரம்பித்துவிடும். என்னைக்கோ சுனாமியோ பூகம்பமோ வந்தா சனம் கொத்தா சாவாய்ங்க. இந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம்லாம் சோனி. நிக்காது.

இப்பமே போராட்டத்துக்கு பின்னாடி அமெரிக்க பணம் விளையாடுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. அணு உலைக்கு ஆதரவா போலி அமைப்புகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இனி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும். அல்லாரும் சைடு வாங்கிக்கினு அவிகவிக வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாய்ங்க. மிஞ்சிப்போனா நம்ம வை.கோ வீரகர்ஜனை செய்துட்டு ஜெயில்ல டென்னிஸ் டோர்னோ நடத்தவேண்டி வரும்.

காந்தி ராம ராஜ்ஜியம்னு பேசினாலும் கிராம ராஜ்ஜியத்துக்கு வாதாடினது இந்த மாதிரி இழவெல்லாம் கிராஸ் ஆகக்கூடாதுன்னுட்டுதேன். ஒரு தர்ப்பைய மாப்பிள்ளைன்னு சொல்லி எடுத்து போட்டாலே அது ஏகத்துக்கு சிலும்புமாம்.

இதுல அரசு -ஆட்சியாளர்களை பத்தி சொல்லவே தேவையில்லை. அதிகாரம் எந்தளவு பரவலாக்கப்படுதோ அந்தளவுக்குத்தேன் ஜன நாயகம் - மனித உரிமைகள், மண்ணாங்கட்டி குதிரை முட்டைல்லாம் பேர் சொல்லும்.

இந்தியாவை பொருத்தவரை மானில அரசெல்லாம் சத்திரத்துல சாப்பிட வந்த ரேஞ்சுதேன். வந்தியா சாப்பிட்டியா போனு இருந்தா சரி. இல்லின்னா ஊட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.

இந்த அழகுல மாநகராட்சி, நகராட்சி,ஊராட்சி,பஞ்சாயத்து ஒன்றியம் பத்தியெல்லாம் சொல்லனுமா என்ன? இந்தியாவோட அணு ஒப்பந்தம் - அணு கொள்கை பிரதமர் மந்திரிகள் இத்யாதியினரோட பேச்சு கூட நம்மை அந்த அளவுக்கு இர்ரிட்டேட் பண்ணலை.

தாளி நாடு போற்றும் நல்லவர் அப்துல் கலாம் நள்ளிரவு உலையை பார்க்கிறதென்ன கரண்டி விட்டு நாலு பருக்கைய நசுக்கி பார்த்து " அட சூப்பரா வெந்திருக்கு வடிச்சுரவேண்டியதுதான்னு சொல்றதென்ன? இதான் நம்மை பைல்ஸ் நோயாளி மாதிரி ஆக்கிருச்சு.

கலாமை நாம என்னைக்குமே நம்பினதில்லை ( இப்பமும் பூத் கேப்சர் பண்ற கவுன்சிலரை வேணம்னா நம்பினாலும் நம்புவமே தவிர பியூராக்ரெட்ஸை மட்டும் நம்பறதாவே இல்லை).ஆனா சாமானிய சனம் கலாமை எப்படில்லாம் கொண்டாடினாய்ங்கன்னு நினைச்சா வா.வெ.

இன்னைக்கு பூனைக்குட்டி வெளிய வந்துருச்சு -சாயம் வெளுத்துருச்சு -கலாமோட அசலான ரேஞ்சு என்னனு புரிஞ்சுருச்சு. இப்பமும் புரிஞ்சிக்கிடாதவுகளுக்காவ 2009, செப்டம்பர்,29ல நாம போட்ட பதிவு ஒன்னை ட்ரிம் பண்ணி இங்கன தர்ரேன்.

கண்ணுள்ளவர் பார்க்கக்கடவர். கிட்னி உள்ளவர் புரிந்துகொள்ளக்கடவர். ( இந்த பதிவை படிச்சுட்டு கலாமை புரிஞ்சிக்கனும்னா மூளைல்லாம் தேவையில்லை தலை. கிட்னி போதும்)

ஜனாதிபதி ஆன கதை:

கலாம் மட்டும் ஒரு முஸ்லீம் தம்பதிகளுக்கு பிறக்காம இருந்திருந்தா ஜனாதிபதி என்ன கவர்னரா கூட ஆகியிருக்க முடியாது. அன்னைக்கு பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ வுக்கு ஒரு மதச்சார்பற்ற முத்திரை தேவைப்பட்டுது, கலாமை ஆப்ட் பண்ணாய்ங்க. தங்களுக்கு மெஜாரிட்டி இல்லாத குறைக்கு கூட்டணியிலான கட்சிகளை + காங்கிரசை தாஜா பண்ணியே தீரனும்ங்கற காலத்தின் கட்டாயத்தால கலாமை சகிச்சுக்கிட்டாய்ங்க தட்ஸால்.

உலகமே போற்றும் மனிதரை விமர்சிப்பது ஒரு மனோ வியாதி என்று சைக்காலஜி சொல்கிறது. ஆனால் நான் சைக்காலஜியையோ, என் சமகாலத்தவர்களையோ கருத்தில் வைத்து எழுதுவதில்லை. நாளை ஒருவன் வரப்போகிறான். அவன் மனதில் கடந்த நூற்றாண்டுகளின் வாசனை கூட இருக்காது. அவன் இன்றைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் எடை போட இருக்கிறான். வைர முத்து சொன்னது போல் "பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கிலிடப்போகிறான்.

இன்று நாம் உடன் கட்டையேறுதல், விதவைக்கு மொட்டை போடுதல் இத்யாதியை எப்படி காட்டுமிராண்டி தனம் என்று கொதிக்கிறோமோ.. அதே போல் இன்றைய நமது முற்போக்கான (?) எழுத்துக்களை நாளை வரப்போகிறவன் காட்டுமிராண்டித்தனம் என்று காட்டுக்கூச்சல் போடப்போகிறான்.

இன்று நாம் யார் பிரதமர், யார் முதல்வர், யார் என்ன ஜாதி, செய்தித்துறை மந்திரியில் சின்ன வீடு எந்த ஜாதி, அவர்கள் வீட்டு ட்ரைவர் என்ன ஜாதி, மாவட்ட பி.ஆர்.ஓ யார் என்றெல்லாம் கணக்கு போட்டு எழுதுகிறோமே..இந்த எழுத்துக்களை , இவை அச்சான காகிதங்களை கறைபடிந்த கேர்ஃப்ரீயை விட கேவலமாக தூக்கி போட்டு எரிக்கப்போகிறார்கள். நாலு பேரில் நாராயணா என்று கோசம் போட என்னால் முடியாது. எனவே தான் இந்த பதிவு.

சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமை அமெரிக்க அதிகாரிகள் சோதனை போட்டதை பத்திரிக்கைகள் தீவிரமாக விமர்சித்து எழுதியிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த விசயத்தில் மக்கள் வழியே என் வழி. கலாமே அல்ல சித்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் திராட்சை விற்கும் சலாமுக்கு இந்த நிலை ஏற்பட்டாலும் நான் கண்டிப்பேன்.

அதே சமயம் நான் அறிவிக்கிறேன் பதவி சுகத்துக்கு குலாம்(அடிமை) அப்துல் கலாம். அரசுகளின் கடைக்கண் பார்வைக்காக எந்த "புரோக்கர்" வேலையை செய்யவும் தயாரா இருக்கிற ஆசாமி ( உ.ம்: அணு ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் தலைமையிலான அரசை காக்க முலயம் சிங் - அமர்சிங் கிட்டே பேச்சு நடத்தினது.

நான் மற்றெந்த அரசியல்வாதியையும்(இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை கண்டு கொள்ளாதவர்களை கூட பெரிதாய் விமர்சித்ததில்லை. காரணம் அவர்கள் புலிகள்.(தமிழ் புலிகள் அல்ல) மக்கள் ரத்தம் குடிக்கும் புலிகள். நான் கவலைப்படுவது கலாம் போன்ற பசுத்தோல் போர்த்த புலிகளைப் பற்றித்தான்.

பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம் என்பதை நான் என்றோ அறிவேன். ஆனால் உலகம் அவரை ஆதர்ச புருஷராக கொண்டாடியது. இதற்கு பார்ப்பன ஆதிக்கம் மிக்க மீடியாவும் ஒரு காரணம். மைனாரிட்டி வர்கத்தை சேர்ந்த கலாமுக்கு உரிய முக்கியத்துவம் தராவிட்டால் தம் சுயமுகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும்,குற்ற மனப்பான்மையிலும் என்.டி.ஏ சர்க்கார் காலத்தில் சற்று அதிகமாகவே முக்கியத்துவம் தரப்பட்டு விட்டது.

அவர் கிழித்தது என்ன? அவர் நெனச்சிருந்தா கருணை மனுவை ஏற்றிருந்தால் பேரறிவாளன்,முருகன்,
சாந்தனுக்கு கயிறு தப்பியிருக்காதா?

அட அவர் பொறந்த ஏரியாவ சேர்ந்த மீனவர்களை இலங்கை ராணுவம் கொத்து பரோட்டா போடறது அந்த மன்சனுக்கு தெரியாதா என்ன? வாயை திறந்தா ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வை விலகிருமே.

என்னதான் நாடு முன்னேறினாலும் அச்சில் வந்ததெல்லம் உண்மை என்று நம்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். (ஒரு வழக்கில் ஆந்திரஹை கோர்ட்டு நீதிபதி முன்பு பத்திரிக்கை கட்டிங்குகளை ஆதாரமாக சம்ர்ப்பித்தபோது அவர் ரூபாய் செலவழித்தால் எந்த செய்தி வேண்டுமானாலும் பத்திரிக்கையில் வெளிவரும் என்பது எங்களுக்கு தெரியும் என்று சொன்னாராம்.)

எனவே பத்திரிக்கைகளில் கலாம் பற்றி பத்திரிக்கைகளில் படித்தவற்றை மறந்து விட்டு (தற்காலிகமாகவேனும்) இந்த பதிவை படியுங்கள்.நிற்க..கலாம் கதைக்கு வருவோம். அரசுத்துறை நிறுவனங்கள்,அவற்றில் நிலவும் சிகப்பு நாடாத்தனம்.ஊழல் குறித்து அறியாதவர்கள் இல்லை. ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் யாதொரு முரண்பாடும் இல்லாது நீண்ட காலம் பணியாற்றியதை கொண்டே கலாமின் ஜாதகத்தை கணித்துவிடலாம்.

சரி ஒழியட்டும் இவர் உந்துதலில் அரசு செய்த அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவித்தவர்கள் மறக்க முடியுமா? இதையும் மேரா பாரத் மகான் கோஷங்கள் மழுப்பிவிட்டன.

இதுகூட போகட்டும்..நான் எளிமையானவன்,அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ளும் கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும். செய்தாரா இல்லை.(ஒரே ஒரு அறையை உபயோகித்துக்கொண்டாராம். பஸ் நிலையத்து நாற்றம் பார்த்து பயணிகள் மூக்கைப்பொத்திக்கொண்டால் புரிந்து கொள்ளலாம் . மேயரே அந்த வேலையை செய்தால். மற்ற 1999 அறைகளை கலாம் உபயோகிக்காத மாத்திரத்தில் அரசுப்பணம் மிச்சமாகிவிட்டதா ? ஏன் தம் பதவி காலத்திலேயே அதை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாகமாற்ற அடம்பிடித்திருக்கலாமே.)


அதுவும் ஒழியட்டும் அந்த மாளிகையின் வியர்த்த செலவுகளையாவது பாதிக்கு குறைத்திருக்க வேண்டாமா? கு.ப. அதை மாறுபட்ட,ஆக்கப்பூர்வமான வழிகளில் உபயோகித்திருக்கலாமே. இன்று கணக்கெடுக்க சொல்லுங்கள் ஜ.மாளிகையில் கலாமை சந்தித்த பிர‌முகர்களை..இதில் வயிறு நிறைந்தவர்கள் எத்தனை பேர்? பார்ப்பன அ.ஜீவிகள் எத்தனை பேர்,ஆளும்,அதிகார வர்க முதலைகள் எத்தனை பேர்?

பீகார் சட்டமன்ற கலைப்பு விவகாரம் ஒன்று போதுமே கலாம் பதவி சுகத்துக்கு குலாம் என்பதை நிரூபிக்க.எம்.பி.க்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார்கள்..தொகுதி நிதியில் விளையாடினார்கள் .கலாம் கழட்டியது என்ன?

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கு.ப.உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டவாவது செய்தாரா? இல்லை.
சரி ஒழியட்டும் வந்த மாதிரியே போயிருந்தாலும் மன்னித்திருக்கலாம். போகும்போது ஆந்திரத்து தந்திர பாபு(அச்சுப்பிழையல்ல) இவரை மீண்டும் ஜானாதிபதியாக போட்டியிட கோரியபொது வெற்றி நிச்சயம் என்றால் ஓ.கே என்று வாயை விட்டார்..பின் ஜ.மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிட்டு மேலுதட்டில் பட்ட மண்ணை துடைத்துக் கொள்ள வேண்டி வந்தது.

என்ன ஒரு ஆறுதல் என்றால் இன்றைய ஜனாதிபதி போல் கலாம் மணமானவர் அல்ல. கலாமின் மனைவி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருக்கவில்லை தட்ஸ் ஆல்.

( எச்சரிக்கை: இந்த பதிவின் மீதான சக பதிவர்களின் கமெண்டுகளையும் படிக்க விரும்புவோர் இங்கே க்ளிக் பண்ணுங்க)